உள்ளாட்சி தேர்தல் விவகாரம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; சுதந்திரமாக செயல்படாதது ஏன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி
2/10/2025 5:20:18 PM
சென்னை- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபரில் நடைபெறவிருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி, தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து உள்ளாட்சி தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மூர்த்தி, ராம்மோகன் ராவ், எஸ்எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது திமுக வக்கீல் வில்சன் ஆஜராகி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது.
நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்து, உள்ளாட்சி தேர்தலில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட கூடாது, தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலனை செய்து நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும், இடஒதுக்கீடு பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதன்பின், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் முடிந்து விட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.
தேர்தல் ஆணைய வக்கீல் பி.குமார் வாதிடும்போது, ‘’இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும். தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால், அரசு இதுவரை எந்த ஆவணங்களும் அளிக்கவில்லை. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
இதைகேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணைய வக்கீலிடம் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.
நீதிபதிகள் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்புதானே. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தேவையான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் பெறலாம். இதுவரை ஒரு பணியை கூட செய்யவில்லை. இதை கடுமையாக கண்டிக்கிறோம். தனிப்பட்ட அமைப்பு என்பதற்கு அர்த்தமே இல்லை. தேவைப்பட்டால் மாநில தேர்தல் ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம். வழக்கை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்று விரிவாக பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.