சசிகலா முதல்வரானால் அமைச்சர் பதவியை வாங்க கோடிகளுடன் சுற்றும் எம்எல்ஏக்கள்; எந்த பதவியும் வேண்டாம்: ஓ.பி.எஸ். பிடிவாதம்
2/6/2025 4:55:07 PM
சென்னை- ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார். அவர் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்று எம்எல்ஏக்கள், தொண்டர்களே வெளிப்படையாக கூறி வந்தனர். கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத சசிகலா, நேற்று திடீரென அதிமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்தை கூட்டினார். இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக அவர் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வருகிற 9ம் தேதி முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. சசிகலா முதல்வர் ஆனால், தற்போதுள்ள அமைச்சரவை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்படி தற்போது கதர்த்துறை அமைச்சராக உள்ள பாஸ்கரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள கருப்பண்ணன், விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்ட 6 அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
அவர்களுக்கு பதில், செங்கோட்டையன், தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, இன்பதுரை, தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல்வர் பதவியை இழந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் அல்லது சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தனக்கு சசிகலா தலைமையிலான ஆட்சியில் எந்த பதவியும் வேண்டாம் என்று ஓபிஎஸ் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் அவரை சரிக்கட்டும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அமைச்சர்களாக இல்லாத பல எம்எல்ஏக்கள் எப்படியாவது சசிகலா அமைச்சரவையில் இடம்பெற்று விட வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலேயே தங்கி இருந்து காய் நகர்த்தி வருகிறார்கள். தற்போது, சசிகலாவுக்கு அவரது உறவினர்களே ஆலோசனை கொடுத்து, அதன்படி அதிமுக கட்சியை வழிநடத்தி வருகிறார்கள். இதில் முக்கியமாக டி.டி.வி.தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் தான் சசிகலாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
இதனால், இந்த இரண்டு பேரையும் சந்தித்து, எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் கொடுத்து எப்படியாவது மந்திரி பதவி வாங்கி விட வேண்டும் என்று சில எம்எல்ஏக்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, சசிகலா தலைமையில் தற்போது அமையவுள்ள ஆட்சியில் அமைச்சர் பதவி வாங்க முடியாவிட்டால், இனி தங்களால் எப்போதும் அமைச்சர் ஆக முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள். காரணம், இனி தேர்தல் வந்தால் அதிமுக வெற்றிபெறுவது கடினம். அப்படியே வந்தாலும், தங்களால் எம்எல்ஏவாக முடியாது. அதனால், தற்போது எம்எல்ஏவாக இருக்கும்போதே, எப்படியாவது சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து அமைச்சர் பதவியை வாங்கி விட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். சில எம்எல்ஏக்கள், ஒரு குரூப்பாக செயல்பட்டு, எங்களில் யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும். இல்லையென்றால், சசிகலாவை ஆதரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இப்படி, அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவிக்காக சசிகலா உறவினர்களை சுற்றி சுற்றி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.