வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
2/3/2025 2:55:41 PM
தாம்பரம்- சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (24). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 3-ம் அணியில் பணிபுரிந்தார். வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பாதுகாப்பு அலுவலகத்தில் பாஸ்கருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வளசரவாக்கத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக பாஸ்கர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். தாம்பரம் அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது பைக் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பாஸ்கர் நிலைதடுமாறி சாலையில் பைக்குடன் விழுந்ததில் மண்டை உடைந்து பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாஸ்கரின் சடலத்தை மீட்டு, குேராம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.