தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொந்தளிப்பு எதிரொலி - பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தல்
1/19/2017 3:00:54 PM
புதுடெல்லி - ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டுமென பிரதமர் மோடியிடம் இன்று காலை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஒரு கோரிக்கை மனுவையும் அவர் அளித்தார். இதையடுத்து, மத்திய அரசின் அறிவிப்புக்காக தமிழகமே காத்திருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆனால் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம் அளித்தார்.
ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்று மத்திய அரசு கை விரித்து விட்டதால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதேபோல, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரும் கைவிரித்து விட்டார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் இளைஞர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர். அதைத்தொடர்ந்து தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஒரு சில மாடுகளை அவிழ்த்து விட்டு போட்டி நடத்தப்பட்டது.
அதேபோல அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அப்போது இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து அலங்காநல்லூரில் இளைஞர்கள், மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக மெரினா கடற்கரையில் விவேகானந்தர்
இல்லம் எதிரே இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் மெரினா கடற்கரை பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு அந்த வழியாக செல்ல முடியவில்லை. முதல்வரும், அமைச்சர்களும் அந்த வழியைப் பயன்படுத்த முடியவில்லை. மெரினாவில் புள்ளியாய் துவங்கி, அலங்காநல்லூரில் வெடித்த இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி விட்டது.
மாநிலம் முழுவதும் பேரணிகள், உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பிரதமரைச் சந்திக்கப் போவதாகவும், அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் நேற்று இரவு போராட்க்குழுவினரை தனது இல்லத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் அதே கோரிக்கையை எழுப்பினார். ஆனால் போராட்டம் நடத்துகிறவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
இந்தநிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் நேற்றிரவே அவசர பயணமாக டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் சென்றனர். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் இல்லத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் அதிமுக எம்பிக்களும் சென்றனர். ஆனால் பிரதமரைச் சந்திக்க எம்பிக்களை அனுமதிக்கவில்லை. இதனால் முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் மட்டும் பிரதமரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.
அப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்.
காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை மனுவை அளித்ததார். அத்துடன், வர்தா புயல் பாதிப்புக்கு நிவாரணம், வறட்சி நிவாரணம் ஆகியவை தொடர்பாகவும் மனுக்களை அளித்தார். அவற்றை கவனமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் குறித்தும், அதை தமிழக அரசு தடுக்க தவறியது ஏன் என்பது குறித்தும் பிரதமர் மோடி விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் அவர் முதல்வரிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.