ஜெயலலிதா அஞ்சலி பேனரில் சசிகலா பெயர் போடுவதா? - அதிமுகவினர் எதிர்ப்பு; பேனர் அகற்றம்
12/9/2025 3:35:51 PM
திருவொற்றியூர், -முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அவருடைய படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி, மவுன ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவொற்றியூர் தியாகராயபுரம் தெருவில் அப்பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டரான புகழேந்தி என்பவர், ஒரு பேனர் வைத்திருந்தார். பேனரில் சசிகலா பெயரையும் எழுதியிருந்தார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சில அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பேனரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். எனினும், அந்த பேனரை போலீசார் அகற்றவில்லை.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அந்த பேனர் முன்பு கூடி, பேனரை அகற்றும்படி ஆவேசமாக கோஷமிட்டனர். பின்னர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். .இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள், ‘‘பேனரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் சாலைமறியல் செய்வோம்’’ என்று போலீசாரிடம் கூறினர். போலீசாரின் சமாதான முயற்சி பலிக்காததால், பிரச்னைக்குரிய பேனரை அகற்றினர்.