மேற்கு வங்கத்தில் ராணுவ குவிப்பை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி ; இரு அவைகளும் ஒத்தி வைப்பு
12/2/2025 3:15:37 PM
புதுடெல்லி, -மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல் கூடியது. லோக்சபாவில் கரன்சி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டன். அப்போது திரிணாமுல் எம்பி சுதீப் பந்தோபாத்யாயா, மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது குறித்து பிரச்னை கிளப்பினார். இதற்கு பதிலளித்து ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறுகையில், ‘‘வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் நிறுத்தி சோதனையிடுவது வழக்கமான ஒன்றுதான். கொல்கத்தா போலீசாரின் வேண்டுகோளை ஏற்றே ராணுவத்தின் இந்த பணிக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டது. ராணுவத்தை வைத்து தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்குவது துரதிருஷ்டவசமானது’’ என்றார். இந்த விவகாரம் மற்றும் கரன்சி விவகாரத்தால் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் மேற்கு வங்க விவகாரம் எதிரொலித்தது. எதிர்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் இந்த பிரச்னையை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ‘‘கடந்த ஆண்டும் அதே இடத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டது. இது வாடிக்கையான ஒன்றுதான். ராணுவத்தை வைத்து யாரும் சர்ச்சை கிளப்ப வேண்டாம்’’ என்றார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எழுந்து, ‘‘மம்தா மீதான இந்த தாக்குதல் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ராணுவத்தை ஒரு போதும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது’’ என்றார். இதற்கு ஆதரவு தெரிவித்து ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே சமாதானம் செய்ய முயன்றார். சுங்க சாவடியில் ராணுவம் பணம் வசூலித்தது என்ற குற்றச்சாட்டை ராணுவ மேஜர் சுனில் யாதவ் மறுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ராஜ்யசபா 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது
ராகுல் குற்றச்சாட்டு :
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன், காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சோனியா பங்கேற்கவில்லை. அப்போது ராகுல் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி நடவடிக்கைகள் அனைத்தும் விளம்பர மோகத்தை மையமாக வைத்தே செய்யப்படுகிறது. இது போன்ற ஒரு விளம்பர மோகம் கொண்ட வீண் பெருமை அடிக்கும் பிரதமர் யாரையும் காங்கிரஸ் ஒரு போதும் கொடுத்ததில்ைல. எல்லா பணமும் கருப்பு பணம் அல்ல; கருப்பு பணம் அனைத்தும் ரொக்க பணம் கிடையாது. கருப்பு பணத்தையும், கருப்பு பொருளாதாரத்தையும் பிரதமர் தேவையில்லாமல் குழப்புகிறார்’’ என்று குற்றம்சாட்டினார்.