சிறுமிகள் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேர் கைது
12/2/2025 2:28:54 PM
காரைக்குடி, -காரைக்குடியில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி பகுதியை சேர்ந்த 15, 13 வயது சிறுமிகளை தாயின் சம்மதத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து காரைக்குடி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடந்த ஆக.30ல் செக்காலை முதல் வீதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த பூமயில் (58), அவரது மகள் சொர்ணலதா (37) ஆகியோரை இந்த வழக்கில் கைது செய்தனர். சிறுமிகள் கொடுத்த தகவலின் படி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கடலை வியாபாரி தங்கராஜ், அவரது மனைவி சித்ரா, அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் முத்து முகமது உள்பட 8 பேர் கடந்த 28ம் ேததி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ரவிக்குமார், அரியக்குடி பில்டிங் கான்ட்ராக்டர் சரவணன், கழனிவாசல் லதா ஆகியோரை டிஎஸ்பி கார்த்திகேயன் நேற்று கைது செய்தார். போலீசார் கூறுகையில், ‘‘இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள லதா மூலமாகவே ஆட்களுக்கு சிறுமிகள் சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.