திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்
12/2/2025 2:27:13 PM
திருவண்ணாமலை, -திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். இதையடுத்து உற்சவர்கள் கோயிலில் இருந்து கொடி மரம் அருகே எழுந்தருள்வார்கள். காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கொடி ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து விழா நடைபெறும் 10 நாட்களும் பகல், இரவில் உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
முதல் நாளான நாளை காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி வாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி. ஹம்சம், சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்கள். 2ம் நாளான நாளை மறுநாள் காலை விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிறை வாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர வாகனத்திலும் மாடவீதியில் பவனி வருகிறார்கள்.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 63 நாயன்மார்கள் ஊர்வலம் 6ம் நாள் (8ம்தேதி) நடக்கிறது. அன்று இரவு வெள்ளிரத ஊர்வலமும் நடைபெறுகிறது. இதையடுத்து 7ம் நாள் (9ம்தேதி) தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் மாடவீதியில் அடுத்தடுத்து பவனி வரும். இதில் அம்மன் தேரை பெண்களே விரதமிருந்து இழுத்து வருவார்கள். இவ்விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவின் உச்சக்கட்டமாக மகாதீபதிருவிழா 10ம்நாள் (12ம்தேதி) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும். விழாவை காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.