காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை
12/2/2025 2:26:41 PM
காரைக்கால், -காரைக்கால் நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் காந்திராஜன். இவர் நேற்று அலுவலகத்தில் இருந்தார். அப்போது அவருக்கு டீ கொண்டு வந்து கொடுத்த பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து பெண் ஊழியர் தனது கணவரிடம் கூறினார். பின்னர் நகராட்சி ஊழியர்கள் ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டர் பார்த்திபனை சந்தித்து முறையிட்டனர். அப்போது காரைக்கால் அரசு ஊழியர்கள் சம்மேளன தலைவர் ஜெயசிங்கும் உடன் இருந்தார். அதனை தொடர்ந்து பெண் ஊழியரிடம் விசாரணை நடத்திய கலெக்டர், மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியும், முன்னாள் நகராட்சி ஆணையருமான ரேவதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஆணையர் காந்திராஜனை பெண் ஊழியரின் உறவினர்கள் அடித்து உதைத்தனர்.அரசு ஊழியர்கள் சம்மேளன தலைவர் ஜெயசிங் கூறுகையில், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.