கரன்சி வாபஸ் அறிவிப்பு எதிரொலி - சீனாவில் இந்திய பணம் டொபாசிட் செய்ய தடை ; வெளிநாடுவாழ் இந்தியர்கள் குழப்பம்
11/18/2016 3:28:33 PM
பீஜிங், -இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக சீனாவில் இந்திய ரூபாயை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சி நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் அந்த பணத்தை மாற்றுவதற்காக கடந்த 1 வார காலத்திற்கும் மேலாக பல்வேறு வேதனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் சீனாவில் உள்ள இந்தியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு இந்திய பணத்தை டெபாசிட் செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் உள்ள பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஏழு இந்திய வங்கிகளும் இங்கு செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் தங்களிடம் உள்ள அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள இந்திய பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு வந்தனர். ஆனால், சீன அரசு உத்தரவின்படி இந்திய பணத்தை பெற்றுக் கொள்ளமுடியாது என வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர் வங்கி கணக்கில் முறையான ஆவணங்களை காட்டி செலுத்தலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியா, அரபு எமிரேட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களிடம் உள்ள இந்திய பணத்தை எவ்வாறு மாற்றிக் கொள்வது என தெரியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கரன்சிகள் செல்லாது என்ற அறிவித்த போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசு முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.