தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் நாளை வாக்குபதிவு - 22ம் தேதி ஓட்டு எண்ணிக்கை
11/18/2016 3:26:44 PM
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. அப்போது தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரைத்தொடரந்து 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் மரணமடைந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. புதுவையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானதால், அவர் எம்.எல்.ஏ. ஆகும் வகையில் நெல்லித்தோப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியையும் சேர்த்து 4 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது.
தஞ்சையில் டாக்டர் அஞ்சுகம் பூபதி(திமுக), ரங்கசாமி(அதிமுக), குஞ்சிதபாதம்(பாமக), ராமலிங்கம்(பா.ஜ.), அப்துல்லா சேட்(தேமுதிக) உள்ளிட்ட 14 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் கே.சி. பழனிசாமி(திமுக), செந்தில் பாலாஜி(அதிமுக), பாஸ்கரன்(பாமக), பிரபு(பாஜ), முத்து (தேமுதிக) உள்பட 39 பேர், திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன்(திமுக), ஏ.கே. போஸ்(அதிமுக), சீனிவாசன்(பாஜ), தனபாண்டியன்(தேமுதிக) உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். ெநல்லித்தோப்பு தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி(காங்), ஓம்சக்தி சேகர்(அதிமுக) உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2 வாரமாக இத்தொகுதிகளில் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடக்கிறது.
வரும் 22ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். தஞ்சை தொகுதி ஓட்டுகள் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியிலும், அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுகள் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.