வங்கியில் அடையாள மை வைக்க தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு - நிதியமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது
11/18/2016 3:26:09 PM
புதுடெல்லி, - வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வருவோருக்கு ைகயில் அடையாள அமை தடவும் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக, இந்த பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி மத்திய நிதியமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவற்றை மாற்ற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், நோட்டுகளை மாற்ற மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளதால் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, பிரதமரின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நீதிமன்றமும் விசாரிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது.
இதற்கிடையே, கருப்பு பண புரோக்கர்கள், ஹவாலா ஆசாமிகளின் நடவடிக்கை காரணமாக பொது மக்களின் ஜன் தன் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏழை மக்களை பயன்படுத்தி இடைத்தரகர்கள் கருப்பு பணத்தை மாற்றுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக ஒருவரே பல முறை வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, இவற்றை தடுக்க வங்கிகளில் பழைய கரன்சியை மாற்ற வருபவர்கள் கையில் அடையாள மை தடவப்படும் என மத்திய பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் அறிவி–்த்திருந்தார்.
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தடைப்படக் கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், நாடு முழுவதும் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவோருக்கு அடையாள மை தடவும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
ஒரு சில மாநிலங்களில் வங்கிகளுக்கு மை வந்து சேர தாமதம் ஆனதால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து மை பெறப்பட்டு தடவப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கையில் மை தடவும் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ‘‘தற்போது மத்திய அரசு தொடங்கியுள்ள இந்த நடவடிக்கை தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வலது கையில் மை தடவப்படும் என்றும், பிற மாநிலங்களில் இடது கையில் தடவப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுவாக தேர்தலின் போது ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு இடது கையில் மை தடவுவது வழக்கம். பல்வேறு மாநிலங்களிலும் விரலில் மை தடவினால் ஓட்டு போட முடியாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாக்காளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வங்கிகள் வாடிக்கையாளர்கள் கையில் மை தடவும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.