Untitled Document
2011
14
Jun
குழந்தைகளை தாக்கும் டயாபடிஸ்


ஒவ்வொருவரும் அவரவர் வயதறிந்து சாப்பிடுவது அவசியமானது. நாள்தோறும் புதிதுபுதிதாய் வந்து கொண்டிருக்கும் நோய்கள் மனிதன் செயற்கைகளில் இருந்து விடுபட்டு, இயற்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன. உலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு, இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை சொல்கிறார் சர்க்கரை நோய் டாக்டர் யுவராஜ். அவர் கூறுவது: பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியை குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக செரிமான மண்டலம் மாற்றுகிறது.

இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து உயிரணுக்களுக்கு சக்தி அளிக்கிறது. குளுக்கோஸை உயிரணு ஏற்றுக் கொள்ள அதனுடன், கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் அவசியம். உடலில் உள்ள குளுக்கோஸைக் கையாளும் அளவுக்கு கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதைத் தான் சர்க்கரை நோய் என்கிறோம். சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விடும் போது அதன் அடுத்தடுத்த அபாயங்களாக சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பு பாதிப்பு, பார்வை இழப்பு, ரத்தக் குழாய் மற்றும் நரம்புகள் சிதைவு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை நோயில் இரண்டு வகை உள்ளது.

முதல் வகை உள்ளவர்களுக்கு அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி, காரண மில்லாத எடை இழப்பு, தளர்ச்சி மற்றும் சோர்வு காணப்படும். பெரும்பாலானவர்களை இரண்டாவது வகை சர்க்கரை நோயே அதிகம் தாக்குகிறது. இந்த வகை சர்க்கரை நோய் ஒரு காலத்தில் 40 வயதினருக்கு வந்தது. பின்னர் நோய் தாக்கும் வயது 30 ஆக இருந்தது. தற்போது பள்ளிக் குழந்தைகளையும் தாக்குவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மனஅழுத்தம், அதிக எடை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த வகை சர்க்கரை நோயுள்ள பலருக்கு எந்த அறிகுறியும் தோன்றாது.

ஒரு சிலருக்கு அதிகளவு தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, அந்தரங்க உறுப்பு, தோல் ஆகியவற்றில் தொற்று நோய் தாக்குதல், காயம் ஆறுவதில் தாமதம், எரிச்சல், கைகால்கள் மரத்துப் போதல், தொடு உணர்ச்சியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இது போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விடுவதால் வயிற்றில் வளரும் குழந்தை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. வழக்கமாக கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னை பிரசவத்துக்குப் பின்னர் சரியாகி விடும். கர்ப்பகாலத்தில் பெண்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் பட்சத்தில், குழந்தைகளுக்கு மனநல குறைபாடு ஏற்படலாம். இதயம், மூளை உள்ளிட்ட உறுப்புகளும் பாதிக்கப்படலாம். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இன்று சுகப்பிரசவங்கள் ஆவது குறைந்து வருவதற்கு, கர்ப்பகால சர்க்கரை நோயும் ஒரு காரணம் என்கிறார் டாக்டர் யுவராஜ்.

பாதுகாப்பு முறை: உடல் உழைப்புக்கு தகுந்த சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடுவது அவசியம். நேரம் தவறி சாப்பிடுவதும் தவறு. நார்ச்சத்து உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்து, உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியானது இதயத்தையும் ரத்தக் குழாய்களையும் சீராக இயங்க வைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இது போன்ற பழக்கங்களை நடைமுறைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில்
எதிர் விளைவுகள் ஏற்படலாம்.

ரெசிபி

சாம்பார் சாதம்: முருங்கைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், பட்டை அவரைக்காய், முட்டைக்கோஸ் ஆகியவற்றை தேவையான அளவில் கட் செய்து இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். அரிசி ஒரு கப், துவரம்பருப்பு 1/2 கப் எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை வதக்கவும். இதில் இஞ்சி பேஸ்ட் ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவை சேர்த்து வதக்கி பின்னர் காய்கறி, அரிசி, பருப்பு சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி விடவும். விசில் வந்ததும் இறக்கி விடலாம்.

கேரட் கட்லட்: துருவிய கேரட் 2 கப். கடலை மாவு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய். புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இத்துடன் கொத்தமல்லித் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி கடைசியாக கேரட் துருவல் சேர்த்து அரை வேக்காடாக எடுத்து மாவு கரைசலில் பிசையவும். இதனை வடை பதத்துக்கு தட்டி ரொட்டித் துருவலில் பிரட்டி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு கட்லட்டாக வேகவைத்து சாப்பிடலாம்.

பேபிகார்ன் மஞ்சூரியன்: பேபிகார்ன் 10 துண்டுகளை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு, கான்பிளவர் மாவு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, சாஸ், உப்பு சேர்த்து பேபிகார்ன் துண்டுகளை ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தக்காளி வெங்காயம் வதக்கி பின்னர் ஊற வைத்த பேபிகார்ன் சேர்த்து பிரட்டலாக வதக்கி இறக்கவும். இதில் அதிகளவு புரோட்டீன் உள்ளது.

டயட்

சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விட்டால் ரத்தக் குழாய்கள் தடிமனாகி, ரத்த ஓட்டம் குறையும். மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்காமல் விட்டால், அடுத்தடுத்து உடல் உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளான மைதா, அரிசி, ரவை, கிழங்கு வகைகளைத் தவிர்க்கவும். சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள் சாப்பிட வேண்டாம். தேங்காய், இளநீர், நுங்கு ஆகியவையும் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள் வேண்டாம்.

உப்பு அதிகம் சேர்க்கும் உணவு பதார்த்தங்களையும் தவிர்க்கவும். திரவ ஆகாரங்களை குறைத்து கெட்டியாக சாப்பிடவும். கொழுப்பு உணவுகளான பால், தயிர், நெய் ஆகியவற்றையும் தவிர்க்கவும். அதிகமாக நார்ச்சத்து உள்ள உணவுகள், புரதம் நிறைந்தவற்றை சாப்பிடலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை, கருப்பு திராட்சை,
பப்பாளி உள்ளிட்ட பழங்களை 100 கிராம் வரை மட்டுமே சாப்பிடலாம்.

அசைவத்தில் முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடலாம். கறியில் எலும்பு பகுதியை சாப்பிடலாம். ஈரல், கொழுப்பு போன்றவற்றை சாப்பிடக் கூடாது. ஒரு நாள் சமையலில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கலாம். உணவில் கட்டுப்பாடாக இருந்தால் மட்டுமே சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அசோகமரப் பூக்களை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் நீரிழிவு குணமாகும்.

அல்லிப்பூ, சரக்கொன்றைப் பூ, ஆவாரம் பூ மூன்றையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.  

ஆரைக் கீரை சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து பொடியாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிடலாம்.
 
ஆலமரத்தின் வேர்ப்பட்டையை கஷாயம் வைத்து குடித்தால் நோய் கட்டுப்படும்.

மருதம்பட்டை, அருகம்புல், நாவல் கொட்டை, நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்
கட்டுக்குள் இருக்கும்.

மா மரத்தின் துளிர் இலைகளைப் பறித்து காய வைத்து பொடி செய்து 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் கட்டுப்படும்.

முள்ளங்கி கீரை சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,