' லிங்கா' பட விவகாரம் ரஜினிக்கு கமல்ஹாசன் ஆதரவு
சென்னை: ' லிங்கா' பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு திருப்பி கேட்பது தவறு என்றார் நடிகர் கமல்ஹாசன்.ரஜினி நடித்த ' லிங்கா' படத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டார்கள். 2 மாதத்துக்குமேல் நீடித்த பிரச்னையை குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு தந்து சமீபத்தில் முடித்து வைத்தார் ரஜினி. இந்நிலையில் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்பது தவறு என்று கமல் கூறி இருக்கிறார். இன்று அவர் சென்னையில் அளித்த பேட்டி:இதற்கு முன் பத்திரிகையாளர்களை இதே அலுவலகத்தில் ' விஸ்வரூபம்' படம் தொடர்பாக சந்தித்தபோது பதற்றமாக இருந்தேன்.
' உத்தம வில்லன்' படத்துக்காக சந்திக்கும்போது சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத படம். உத்தம வில்லன் படத்தில் பாலசந்தரை நடிக்க கேட்டபோது, பாதியிலேயே ஷுட்டிங் நிறுத்த வேண்டி வரும் என்றார். அதற்கு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. எனது ஒவ்வொரு படத்திலும் என் வாழ்க்கை விஷயம் இருக்கும். இதிலும் அது இருக்கும். ஆனால் சினிமாவை கிண்டல் செய்யும் படம் இல்லை. இப்படத்தை இயக்க ரமேஷ் அரவிந்த் பொருத்தமானவராக இருந்தார்.
நான் என்ன படம் செய்தாலும் இடையூறு வருகிறது. எனது முகவரியை நம்பர் 4, இடையூறு தெரு என வைத்துவிடலாம் போலிருக்கிறது. முன்பு ' தசாவதாரம்' எனது கதை என்று ஒருவர் சொன்னார். இப்போது அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. மும்பை எக்ஸ்பிரஸ், சண்டியர் என தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்தேன். மருதநாயகம் படம் மீண்டும் தொடங்குவதுபற்றி எனது நண்பர்கள் கேட்டார்கள். அதுபற்றி ஆலோசனை நடக்கிறது. விஸ்வரூபம் 2 எப்போது வரும் என்கிறார்கள். அதை தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும்.
என் படங்களில் இலங்கை பிரச்னையை ஏன் பதிவு செய்வதில்லை என்கிறார்கள். தெனாலியில் லேசாக தொட்டபோதே பிரச்னை வந்தது. உயிரை கொல¢வது எந்த இனத்தில் நடந்தாலும் தடுக்கப்பட வேண்டும். விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்பது சரியா என்கிறார்கள். சினிமா என்பது இயக்குனர்களுக்கு கலை, பணம் போடுபவர்களுக்கு வியாபாரம். வியாபாரத்தில் நஷ்ட ஈடு கேட்பது தவறு. தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகன் பாதி படம் பிடிக்கவில்லை என்றால் பணத்தை திருப்பி கேட்டால் தர முடியுமா?இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.