கெய்வ்: உக்ரைனின் கிழக்கு பகுதியில் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 2 சட்டங்கள் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ அறிவித்தார்.உக்ரைன் நாட்டில் கிழக்கே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கிரிமியாவை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வாக்கெடுப்பு நடத்தி, அப்பகுதியை ரஷ்யாவுடன் இணைத்து கொண்டனர். அத்துடன் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் உட்பட பல்வேறு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளனர்.இப்பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் அரசு படைகள் அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு பதிலடியாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர்.இதைத் தொடர்ந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பால், கிழக்கு உக்ரைனில் கடந்த மாதம் 12-ம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருதரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் ராணுவ வாகனத்தின் மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.இந்நிலையில், உக்ரைன் நாடாளுமன்றம் நேற்று கூடியது. டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய 2 நகரங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும், அப்பகுதிகளில் ரஷ்ய மொழிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 2 சட்டங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 சட்டங்களுக்கு ஆதரவாக 260 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் நகரங்களில் உக்ரைனிய சட்டப்படி நியாயமான முறைப்படி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலம், உக்ரைனில் மீண்டும் உயிர்ப்பலிகள் நிகழ்வது தடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ கூறினார்.ஏராளமான உக்ரைனியர்களின் ரத்தத்தினால் கறை படிந்த கைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதை கண்டிக்கிறேன் என்று உக்ரைனின் முன்னாள் அதிபர் யுலியா டைமோசென்கோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.