கோவை சரவணம்பட்டியில் வாடகை வீட்டைக் காலி செய்த மெக்கானிக், அட்வான்ஸ் தொகையைத் திரும்ப வாங்குவதற்காகச் சென்றார். வீட்டு உரிமையாளர் அங்கு இல்லை. மனைவி மட்டும் இருந்தார். தனிமை, மிருக குணத்தைத் தூண்டியது. பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, வீட்டு உரிமையாளர் மனைவி மறுக்க, ஆத்திரத்தில் மெக்கானிக் அவரைச் சரமாரியாகக் குத்திக் கொன்றார். இதைப் பார்த்து அலறிய 7 வயது மகன், தூங்கிக் கொண்டிருந்த 11 மாதக் குழந்தையின் உயிரையும் விட்டுவைக்கவில்லை. 3 பேரின் உடல்களில் 54 இடங்களில் கத்தியால் குத்தும் அளவு, காமுகனின் வெறித்தனம் எல்லை மீறியது.
‘முயற்சி பலனளிக்கவில்லை. சுயரூபம் வெளிப்பட்டது’ என்றதும் கொடூரர்கள் கொலைப் பாதகத்துக்கு அஞ்சுவதில்லை. அப்பாவி உயிர்களைப் பறிக்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. பசிக்கும்போதுதான் மிருகங்கள் மற்ற விலங்குகள், பறவைகளை வேட்டையாடுகின்றன. பெண்ணாசைக்காக 3 உயிர்ப்பலிகள், விலங்கினும் கீழான கொடுஞ்செயல் என்பதில் சந்தேகம் இல்லை.கொடூரனுக்கு இரட்டைத் தூக்குத்தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மனிதநேயம் அல்ல என்று கூறி, சர்வதேச நாடுகள் பலவும் தூக்குக்கு எதிராக அணிதிரண்டுவரும் நிலையில், தூக்குத்தண்டனை தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், அரிதினும் அரிதான வழக்குகளில் இதுபோன்ற தீர்ப்புகள், பெரும்பாலான மக்களின் மன உணர்வுகளை ஆறுதல்படுத்துவதாக அமைகிறது. கடும் தண்டனை வழங்கினால்தான், கொடுங்குற்றங்கள் குறையும் என்பது இவர்களது எண்ணமாக இருக்கிறது. நிர்பயா பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்துக்காக, ‘பலாத்காரம் போன்ற குற்றங்களை ஆண் செய்யத் துணிவதற்குப் பெண்கள்தான் காரணம்' என்று துணிந்து பேட்டியளித்தார். சிறைக்கூடங்கள், ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களாக இன்னும் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.
குற்றவாளி திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்காதது துரதிர்ஷ்டமே. பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், கடும் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். சட்டரீதியான ஆதாரங்கள் கிடைக்காமல் போவதும், புகார் கொடுத்த பெண்கள் உள்ளிட்டோரே துணிந்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கத் தயங்குவதும் இத்தகைய குற்றவாளிகள் தப்புவதற்குக் காரணங்களாக உள்ளன. இதனால், சில சமயங்களில் குற்றவாளிகள் பொதுமக்களிடம் மாட்டிக்கொள்ளும்போது, கொலை செய்யப்படும் அளவு விபரீதம் நேர்ந்துவிடுகிறது. தண்டனைகள், மனிதர்களின் தீய குணங்களை மாற்றிவிட முடியாது என்பதற்காக, தண்டனைகளே இல்லாமல் செய்துவிட முடியாதல்லவா...