ஐதராபாத்: தெலங்கானாவில் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து சட்ட பேரவையில் நேற்று எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியின் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தில் உள்ள கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மாநில அரசு மாற்றி அமைத்து உத்தரவிட்டது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தெலங்கானா சட்டபேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தின் போது தெலங்கானாவில் கல்லூரி கல்வி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து எதிர்கட்சிகள் பிரச்னையை கிளப்பின. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஜீவன் ரெட்டி, பாஜ எம்எல்ஏக்கள் லட்சுமண், கிஷண் ரெட்டி ஆகியோர் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாநில அரசின் இந்த முடிவால் ஏராளமான ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும் கல்லூரிகளுக்கு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் பேராசிரியர் நியமனம், மாணவர்கள் அட்மிஷன் ஆகியவையும் கால தாமதம் ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டினர். பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் ஸ்ரீஹரி இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார். மேலும் அவர் கூறுகையில், மாற்றி அமைக்கப்பட்ட கல்வி கட்டண திட்டத்தால் சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டில் பயன் பெறுவர் என்றும் சுட்டி காட்டினார். மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை நிர்ணயம் செய்வதில் மாநில அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் தெரிவித்தார்.