ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிப்ரவரி மாதம் 14ம் தேதி துவங்கியது. தற்போது லீக் சுற்று முடிந்து, போட்டிகள் விறுவிறுப்பான காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாக் அவுட் சுற்றான இதில் தோல்வியடையும் அணி வெளியேற வேண்டியதுதான். அதனால் இனி ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு பந்தும், ரசிகர்களின் பல்ஸை எகிற வைக்கும். மொத்தம் 14 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடந்து வந்தன. ஏ பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
வலுவான இங்கிலாந்து படுமோசமாக விளையாடியதால் காலிறுதிக்கு முன்னேறாமல் பரிதாபமாக வெளியேறியது. அந்த இடத்தை பங்களாதேஷ் பிடித்து கொண்டது. கத்துக்குட்டிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் வழக்கம் போல லீக் சுற்றுடன் மூட்டை, முடிச்சுகளை கட்டியுள்ளன. 42 லீக் போட்டிகளில் 35 சதம், டிவில்லியர்ஸ், மெக்குல்லமின் அதிரடி, கிறிஸ் கெயிலின் இரட்டை சதம், வலுவான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு, சாதாரண அணிகளான அயர்லாந்து, பங்களாதேஷ் அளித்த அதிர்ச்சி தோல்விகள் போன்ற பல்வேறு சாதனைகளுடன் லீக் சுற்று முடிவடைந்துள்ளது.
நாளை (18ம் தேதி) சிட்னியில் நடக்கும் முதல் காலிறுதியில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கையின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. சங்ககாரா தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை நாக் அவுட் போட்டிகளில் வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்ற போராடும். சேசிங்கில் தடுமாறுவது, முன்னணி வீரர்கள் பார்ம் அவுட் போன்ற காரணங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாளை மறுதினம் (19ம் தேதி) மெல்போர்னில் நடக்கும் இரண்டாவது காலிறுதியில், இந்தியா-பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் முறையாக காலிறுதிக்குள் நுழைந்த உற்சாகத்தில் பங்களாதேஷ் உள்ளது.
ஆனால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஒட்டுமொத்தமாக சூப்பர் பார்மில், லீக் சுற்றில் விளையாடி 6 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தியுள்ள இந்தியாவை வீழ்த்துவது பங்களாதேஷுக்கு கடினமான ஒன்று. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. 20ம் தேதி அடிலெய்டில் நடக்கும் மூன்றாவது காலிறுதியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் நியூசிலாந்தை தவிர வேறு எந்த அணியுடனும் ஆஸ்திரேலியா தோல்வியடையவில்லை. வீரர்கள் பார்மில் உள்ளது ஆஸ்திரேலியாவுக்கு பலம். மாறாக பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பார்ம் இன்றி உள்ளனர். லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை வென்றது மட்டுமே பாகிஸ்தானின் சாதனை. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால், ஆஸ்திரே லியா-பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன்தான் மோத வேண்டி வரும். அதனால் இந்த போட்டி இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
21ம் தேதி வெலிங்டனில் நடக்கும் கடைசி காலிறுதியில் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியாவை போல் நியூசிலாந்தும் லீக் சுற்றில் விளையா டிய 6 போட்டிகளையும் வென்று, சூப்பர் பார்மில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியோ தட்டுத்தடுமாறிதான் காலிறுதி வாய்ப்பை பெற்றது. ஆனால் வெஸ்ட் இண்டீசை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. நியூசிலாந்து இதுவரை உலக கோப் பையை வென்றதில்லை. ஆனால் தற்போது சொந்த மண்ணில் போட்டி கள் நடப்பதும், வீரர்களின் பார்மும், அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்கு நியூசிலாந்துக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பமாக உள் ளது. விறுவிறுப்பாக நடக்க இருக்கும் காலிறுதி சுற்று போட்டிகளின் முடிவு தெரியும் வரை ரசிகர்கள் திக்..திக்.. நிலையில் இருப்பது உறுதி.