பிரேசில் நாட்டில் சுற்றுலா பஸ் உருண்டு கவிழ்ந்ததில் 42 பேர் பலி, 18 பேர் படுகாயம்
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த பஸ், பள்ளத்தாக்கில் உருண்டு கவிழந்தது. இந்த விபத்தில் 42 பேர் பலியானார்கள். மேலும் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.பிரேசில் நாட்டின் தெற்கே 1300 அடி உயர மலைப்பாங்கான பகுதியில் சான்டா காட்டரினா என்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு மக்கள் சுற்றுலா வருகின்றனர். சான்டா காட்டரினா நகரில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு பஸ் ஒன்று கிளம்பியது. நள்ளிரவு நேரத்தில் அந்த பஸ் மலைபாதையில் இறங்கி கொண்டிருந்தபோது, ஒரு சாலை திருப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சான்டா காட்டரிகா நகர போலீசாரும் மீட்பு குழுவினரும் பொதுமக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நள்ளிரவு நேரம் என்பதால், அவர்கள் டார்ச் வெளிச்சத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.பின்னர் நேற்று மதியம் வரை தொடர்ந்த மீட்பு பணியில், பஸ்ஸின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று போலீசார் கூறுகின்றனர்.பிரேசில் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாகன விபத்துகளில் 43 ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.