நடப்பு உலக கோப்பையில் லீக் சுற்றில் பி- பிரிவில் இடம் பிடித்த பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்தியாவுடன் பரிதாபமாக தோற்றது. அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் அடி வாங்கியது. இதனால் பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் எழுந்தன. அந்நாட்டு ரசிகர்கள் அதிருப்தியில் டிவிகளை அடித்து நொறுக்கியதுடன், தெருவில் இறங்கி வீரர்களுக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர். சர்ச்சைகளுக்கு மத்தியில் அடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் கத்துக்குட்டி யுஏஇ அணியை வீழ்த்தி பாகிஸ்தான் பார்ம்முக்கு திரும்பியது.5வது போட்டியில் பலம் வாய்ந்த தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.
கடைசி லீக் போட்டியில் அயர்லாந்தை வென்று பி பிரிவில் 3வது இடத்தை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் பின்னர் எழுச்சி கண்டுள்ளது. முதல் 3 போட்டிகளில் அந்த அணியின் துவக்கம் சரியாக அமையவில்லை. குறிப்பாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இந்தியாவுக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கிய அனுபவ வீரர் யூனிஸ்கான் விரைவிலேயே ஆடடம் இழந்தார். இதன்பின்னர் நடந்த ஆட்டங்களில் நசீர்ஜாம்ஷெட் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவரும் சோபிக்கவில்லை.
இதனிடையே விக்கெட் கீப்பராக கூடுதலாக பொறுப்புடன் களம் இறங்கிய உமர்அக்மலும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. முக்கிய கட்டத்தில் கேட்ச்களை கோட்டைவிட்டார். இந்நிலையில் முதல் 4 போட்டிகளில் ஓரம்கட்டப்பட்ட விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அந்த போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி ரன் 49 குவித்ததுடன், அபாரமாக 4 கேட்ச்சுகளை பிடித்தும் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் 101 ரன் விளாசி போட்டிநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரின் வருகையால் பாகிஸ்தான் அணி புது எழுச்சி கண்டுள் ளது. தடுமாறிய தொடக்க பேட்டிங் வரிசை பலமாகி உள்ளது.1992ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் தான் இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த உலக கோப்பையிலும் முதலில் தடுமாறி தோல்விகளை கண்ட பாகிஸ்தான் பின்னர் தொடக்க வீரராக களம் கண்ட இன்சமாம் உல்ஹக்கின் அதிரடியால் எழுச்சி கண்டு கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையும் ஆஸி. மைதானம் மற்றும் சர்ப்ராஸ் அகமதுவின் துணிச்சல் பேட்டிங்கால் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.