கராச்சி: பாகிஸ்தானில் எந்தவித தட்பவெப்பநிலையிலும் இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் லேசர் தொழில்நுட்பத்தில் உருவான தானியங்கி விமான ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்னும் பிற அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது.பாகிஸ்தானில் பல்வேறு பிராந்தியங்களில் தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களின் தீவிரவாத செயல்பாடுகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கைபர் பக்துன்கவா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்கிறது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர ராணுவம் திட்டமிட்டது.இதைத் தொடர்ந்து, தானியங்கி விமான ஏவுகணைகள் மூலம் இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் வகையில், லேசர் தொழில்நுட்பத்தில் எந்த தட்பவெப்பநிலையிலும் இயங்கக்கூடிய புர்ராக் மற்றும் ஷாபூர் என்ற அதிநவீன ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன.தற்போது லேசர் தொழில்நுட்பத்தில் இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் புர்ராக் ஏவுகணை நேற்று மாலை கராச்சி அருகே ராக்கெட் ஏவுதளத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, பல்வேறு ரக அதிநவீன தானியங்கி விமான ஏவுகணைகளை தயாரித்து சோதனையிட திட்டமிட்டு உள்ளோம்.அத்துடன், சீன தொழில்நுட்பத்தில் பல்வேறு ஏவுகணைகளையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை விரைவில் சோதனை செய்கிறோம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எங்களது ஏவுகணைகள் அனைத்தும் வெற்றிகரமாக இலக்கை அடைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் நேற்றிரவு செய்தி வெளியிட்டார்.