குடி போதையில் பெண்களிடம் சில்மிஷம் : வாலிபர் அடித்து கொலை : ஆக்ராவில் பரபரப்பு
ஆக்ரா: மதுகுடித்து விட்டு பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் அடித்து கொன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆக்ராவை சேர்ந்தவர் ஜீது. குடிப்பழக்கம் உடையவர். இவர், நேற்று மதுகுடித்து விட்டு தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார். இதை கண்ட அப்பகுதியினர் திரண்டு வந்து ஜீதுவை சரமாரியாக தாக்கினர். அவரை அடித்து உதைத்ததுடன், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர். அவ்வழியே சென்ற யாரும் இதை தடுக்கவில்லை. தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜீதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், ‘‘வாலிபரை இழுத்து வந்து இரக்கமின்றி பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். யாரும் இதை தடுக்கவும் இல்லை; அவருக்கு உதவி செய்யவும் இல்லை’’ என்றார்.கடந்த வாரம், பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அசாம் மாநில வாலிபர், நாகலாந்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பொதுமக்கள் சிறைக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த சில தினங்களுக்குள் ஆக்ராவில் வாலிபர் அடித்து கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.