முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு சம்மன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தருண் கோகாய் குற்றச்சாட்டு
கவுகாத்தி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அசாம் முதல்வர் தருண் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஒடிசாவில் உள்ள தலப்பிராவில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களை ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் செயலாளர் பி சி பராக் உள்ளிட்டோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் டெல்லியில் பேரணியாக சென்று மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மன்மோகனுக்கு காங்கிரஸ் பக்க பலமாக இருக்கும் என்றும் சோனியா தெரிவித்தார். அதே போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக இருப்பதாக அசாம் முதல்வர் தருண் கோகாய் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். மேலும் மன்மோகன் சிங் இந்த வழக்கில் இருந்து நிச்சயம் விடுவிக்கப்படுவார். அவர் தூய்மையானவர் என்பது அனைவருக்கும் தெரிய வரும். நேர்மையான பண்புகளை கொண்ட மன்மோகன் சிங் நிச்சயம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர். பழிவாங்கும் அரசியலில் சிக்கி பாதிக்கப்பட்டதற்கு மன்மோகன்சிங் ஒரு உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.