புதுடெல்லி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கெனவே 2 ராக்கெட் ஏவுதளங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இயக்கி வருகிறது. தற்போது இங்கிருந்து ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு விண்கலங்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது புதிய 3-வது ராக்கெட் ஏவுதளம் நிறுவுவது குறித்து இஸ்ரோ ஆய்வு பணிகளை மேற்கொண்டது.அப்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தின் அருகே பூமத்திய ரேகை செல்வதாலும், ஆண்டு முழுவதும் சமமான காலநிலை நிலவுவதாலும், இங்கிருந்து புவி வட்டப்பாதையில் ராக்கெட்டுகளை செலுத்துவதால் ஏராளமான எரிபொருள் மிச்சமாகும். அத்துடன் ராக்கெட் ஏவுவதற்கு ஏற்படும் செலவினங்களில் ரூ.110 கோடியை மிச்சப்படுத்தலாம். இதனால் குலசேகரப்பட்டினத்தில் புதிதாக 3-வது ராக்கெட் ஏவுதளத்தை நிறுவலாம் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
இந்நிலையில், புதிதாக 3-வது ராக்கெட் ஏவுதளத்தை நிறுவுவது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது. அப்போது, ஸ்ரீஹரிகோட்டாவிலேயே புதிதாக 3-வது ராக்கெட் ஏவுதளம் அமையும். ஏனெனில், ஏற்கெனவே உள்ள ராக்கெட் ஏவுதளங்களுடன் புதிய ஏவுதளத்தையும் இணைத்து, அவற்றின் செயல்பாடுகளை முழுமையாக பயன்படுத்த முடியும். புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகளும் திட்டப் பணிகளும் விரைவில் துவங்கப்படுகிறது என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.இதனால் குலசேகரப்பட்டினத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில், தென்தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து போனது இங்கு குறிப்பிடத்தக்கது.