எளிதில் ஏமாற்றலாம் அல்லது ஏமாறுவார்கள் - இந்த நம்பிக்கையில், வறுமைப்பிடியில் சிக்கியவர்களைச் சுரண்டுவதற்கு, மோசடிக்காரர்கள் தயங்குவதில்லை. ஏழைப் பெற்றோரைக் குறிவைத்து, அவர்களது குழந்தைகளைக் கடத்துவதற்கென்றே பல கும்பல்கள் செயல்படுகின்றன. ‘குழந்தைய வளர்க்கக் கஷ்டப்படற. எனக்குத் தெரிஞ்சவங்களுக்குக் குழந்தை இல்ல. கோடீஸ்வரங்க. குழந்தையத் தத்துக் கொடுத்தா தங்கம் மாதிரி பாத்துக்குவாங்க. நல்லா படிக்கவும் வைப்பாங்க. உங்களுக்கும் ஏதாவது பணம் தரச் சொல்றோம்' என்று ஆசை வார்த்தை கூறும்போது, ஏழைப்பெற்றோரின் உள்ளங்கள் மயங்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோர் இதற்கு எளிதில் சம்மதிக்கின்றனர். சம்மதிக்காத பெற்றோரை மூளைச்சலவை செய்யவும் தயங்குவதில்லை.
‘நாம தான் கஷ்டப்படறோம்... குழந்தைகளாவது நல்லா இருக்கட்டுமே‘ என்று பெற்றோர் கருதினால், அது பகல் கனவு. உண்மையில், சிறந்த குடிமகனாக குழந்தைகள் உருவாவதில்லை. பிச்சையெடுத்தல், திருட்டு, பாலியல் தொழில், போதைப்பொருள் கடத்தல், உடல் உறுப்புகள் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். குழந்தைகள் உயிருடன் இருப்பார்களா என்பதுகூட உத்தரவாதம் இல்லை.திருச்சி திருவெறும்பூரில் குழந்தைகள் கடத்தும் கும்பல் பின்புலத்துடன் செயல்பட்டு வருவது சமீபத்தில் தெரியவந்தது. நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான தகவல். இந்தக் கும்பல், குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் கல்வி - திருட்டு. குழந்தைகள் பலர் சூரத் கும்பலிடம் விற்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டபோதிலும், 6 குழந்தைகள் தான் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தற்போது 10 வயதுக்கு மேற்பட்டவர்கள். கடத்தப்பட்டு சில ஆண்டுகள் கடந்திருக்கின்றன. சிறுவர், சிறுமிகள் பலர், தற்போது தங்கள் பெற்றோரையே மறந்து, திருட்டுக்கும்பலுடன் இணைந்து செயல்படுபவர்களாக மாறியிருக்கின்றனர்.மீட்கப்பட்ட மகன் அல்லது மகளின் நிலையைப் பார்த்து ஏழைப்பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் நன்றாக இருக்கும் என்ற நினைத்த பெற்றோர்கள், தங்கள் அறியாமையை நினைத்து தலைகுனிகின்றனர்.
கல்வியறிவு இல்லாமை, ஏழ்மையில் இருந்து மீள முடியாமை, அதிகக் குழந்தைகள், விழிப்புணர்வு ஏற்படுத்தாத சமூகம், கடன் அல்லது சுரண்டலின் பிடியில் சிக்கிக்கொண்ட கொடுமை என இவர்களது இழிநிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. இன்னும் மீட்கப்பட வேண்டிய குழந்தைகள் ஏராளமானோர் இருந்தாலும், அவர்களை மீட்பது எளிதானதாக இருக்காது. இதுகுறித்து அரசும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. இதற்கெனத் தனி போலீஸ் படை செயல்பட்டால்தான், பிரதானக் குற்றவாளிகள் சிக்குவார்கள். குழந்தைகளையும் மீட்க முடியும்.