ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 10 பேர் பலி, 30 பேர் படுகாயம்
பாக்தாத்-ஈராக் நாட்டில் நேற்று ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ரமாதி உள்ளிட்ட 7 நகரங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 10 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.பாக்தாத்துக்கு மேற்கே அன்பர் பிராந்தியத்தில் இருக்கும் ரமாதி, ஹவாஸ், மலாப், டோய், அல்பு பராஜ் மற்றும் அல்பு எய்தா உள்ளிட்ட 7 நகரங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கூட்டாக சேர்ந்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இப்பகுதிகள் அனைத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளாகும்.இந்த 7 இடங்களில் நேற்று காலை 7 மணியளவில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அப்பிராந்திய போலீஸ் உயர் அதிகாரி முஸ்தபா சமீர் நேற்றிரவு தகவல் வெளியிட்டார்.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய திக்ரித் நகரை மீண்டும் கைப்பற்றுவதற்காக கடந்த 10 நாட்களாக ஈராக் அரசு படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. தற்போது திக்ரித் நகரம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.ஈராக் அரசு படைகளின் தாக்குதலை முறியடிக்கவே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கூட்டாக சேர்ந்து, ஒரே நேரத்தில் 7 இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து உள்ளனர் என்று ஈராக் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித் நகரை மீட்க அரசு படைகள் தாக்கி வருகின்றன. அங்கு அரசு படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று 7 இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக ஈராக் அரசு கூறுகிறது.