ஆதிக்கம் செலுத்த விரும்பாவிட்டாலும், ஆதிக்க சக்திகள் நுழைந்துவிடாமல் தடுக்க வேண்டியது கட்டாயம். இந்தியப் பெருங்கடல் மீது சீனாவுக்கு எப்போதுமே கண். கடல் மீதான ஆதிக்கத்தை நிலைநாட்டினால், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இதனால், இந்தியாவின் அண்டை நாடுகள் மீது சீனா பாச மழை பொழியும். ராஜபக்சே பாச மலராக இருந்ததால், சீனா சொல்வதற்கெல்லாம் இலங்கை தலையாட்டியது.
தமிழர்களின் வாக்குகளால் அதிபரான சிறிசேனவுக்கு, சீனாவின் குள்ளநரித் தந்திரம் தெரிந்திருக்கிறது. இந்தியாதான் நிரந்தர நண்பனாக இருக்க முடியும் என்பதை உணர்ந்ததால், மோடியுடன் சிறிசேன நெருங்கியுள்ளார். சமீபத்தில் சிறிசேனவின் இந்தியப் பயணமும் அதன் அடிப்படையிலானதுதான். நாளை இலங்கை செல்ல உள்ள நிலையில், செஷல்ஸ், மொரீசியஸ் ஆகிய தீவு நாடுகளில் மோடியின் பயணம் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இந்த நாடுகளில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது. மக்களின் மனங்களும் அப்படிப்பட்டதுதான். செஷல்சில் வசிப்பவர்கள் ஒரு லட்சம் பேர்தான். 1976ல் குடியரசு ஆன ஆப்ரிக்க நாடு. மொரீசியஸ், இந்தியா மீது எப்போதுமே வாஞ்சை காட்டும் நாடு. 2 நாடுகளுமே கலாசார ரீதியாக, இந்தியாவுடன் நெருக்கமுள்ளவை. பல ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தாலும், இந்தக் குட்டி நாடுகள் மீது மோடி அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் உரிமை நிலைநிறுத்தப்படவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும், இந்த நாடுகளின் நேசம், இந்தியாவுக்கு நிச்சயம் தேவை. இந்தியாவுக்கு, இந்தியப் பெருங்கடல் வழித்தடம், தங்கு தடையில்லாததாக இருந்தால்தான் எதிர்காலத்துக்கு நல்லது.
செஷல்சுக்கு 75 மில்லியன் டாலர் மற்றும் மொரீசியசுக்கு 500 மில்லியன் டாலர் உதவியையும் இந்தியா வழங்கியிருக்கிறது. சீனாவின் ‘வள்ளல்Õ யுத்திக்கு, இந்த நாடுகள் ஏமாறவில்லை. இதற்குக் காரணம், இந்த நாடுகள் இந்தியாவின் மீது கொண்டுள்ள நம்பிக்கை. மோடியின் இலங்கைப் பயணத்திலும், இந்தியப் பெருங்கடல் மீதான பேச்சு இடம்பெறும். நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். மோடி உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை சென்றால்தான் இலங்கைக்கு நல்லெண்ணம் வருமா என்பது தமிழக மீனவர்களின் ஆதங்கம். இந்திய, இலங்கை மீனவர்களின் உறவு கடல் சார்ந்தது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ‘துப்பாக்கிÕ பேச்சு, இருநாட்டு உறவுகளை எந்தவிதத்திலும் மேம்படுத்த உதவாது. இருநாட்டு மீனவர்களுக்கும் சிண்டு முடிவதால், பிரச்னை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று கருதுவதும் முட்டாள்தனம். இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்கள் மீது நேசம் காட்ட வேண்டாம். அத்துமீறாமல் இருந்தால் சரிதான். மோடியின் இந்தியப் பெருங்கடல் ராஜதந்திரத்துக்கு சபாஷ். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம், ராணுவ வெளியேற்றம் உள்ளிட்டவை, மோடியின் பயணத்தால் சாத்தியப்படலாம். தமிழக மீனவர்களின் நலனையும் மோடி கருத்தில் கொள்வார் என்று நம்பலாம்.