அதிமுக எழுச்சி மாநாட்டு பேரணி : கொளுத்தும் வெயிலில் பரிதவித்த மாணவிகள்
சிவகங்கை : அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொள்ள கல்லூரி மாணவிகளை அழைத்து வந்து 2 மணிநேரம் வெயிலில் நடக்க வைத்த சம்பவம் சிவகங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் நேற்று எழுச்சி மாநாடு நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். எம்பி செந்தில்நாதன் எம்எல்ஏக்கள் சித.பழனிச்சாமி, குணசேகரன் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள் முருகானந்தம், உமாதேவன், பாசறை மாவட்ட செயலாளர் அன்பரசன் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பாசறையைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கூட்டத்தை அதிகமாக காண்பிக்க மன்னர் துரைச்சிங்கம் கலை கல்லூரிக்கு சென்ற அதிமுகவினர் மாணவ, மாணவிகளை அழைத்து வந்தனர். மாநாட்டுக்கு முன்னதாக ராமச்சந்திரா பூங்காவில் இருந்து அரண்மனை வாசல் வரை பேரணி நடந்தது. பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். பெரும்பாலான மாணவர்கள் பாதியிலேயே களைந்து சென்றுவிட்டனர். மாணவிகளோ பேரணி முடியும் வரை சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நோட்டு மற்றும் சுடிதாரால் முகத்தை மூடியபடி நடந்து சென்றனர். கடுமையான வெயிலில் சுமார் 2 மணிநேரம் மாணவிகள் நடந்ததால் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர். பின்னர் அமைச்சர் பேச்சுடன் மாநாடு நிறைவடைந்தது. கட்சி கூட்டத்துக்கு கல்லூரி மாணவிகளை அழைத்து வந்து வெயிலில் நடக்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.