ஈசிஆரில் அரசு பஸ்- டேங்கர் லாரி மோதல் : 3 பேர் பரிதாப சாவு : 20 பேர் படுகாயம்
மதுராந்தகம் : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ்சும் டேங்கர் லாரியும் மோதியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு அரசு பஸ் புறப்பட்டது. சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பாண்டிச்சேரி இருந்து சென்னை நோக்கி டேங்கர் லாரி வந்தது. வெண்ணங்குபட்டு அருகே வரும்போது அரசு பஸ்சும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில், அரசு பஸ் டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த இளங்கோவன்(40), சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பயணி நடராஜன்(42), டேங்கர் லாரி டிரைவர் மதுராந்தகம் அருகேயுள்ள பெரும்பேர்கண்டிகை சேர்ந்த விஜயகுமார்(38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பஸ்சில் சிக்கியவர்கள் கூச்சல் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தகவல் சூணாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 5 பெண்கள் உட்பட 20 பேர் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. போலீசார் சென்று போக்குவரத்தை சரிப்படுத்தினர். இதனால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.