தூதரக அதிகாரி கடத்திய ரூ. 10 கோடி தங்கம் பறிமுதல்
டாக்கா: வங்கதேசத்தில் வெளிநாட்டு தூதர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள 27 கிலோ தங்கத்தை வடகொரிய தூதரக அதிகாரி கடத்தி வந்தார். இதனை வங்கதேச அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.வங்கதேச தலைநகர் டாக்காவில் வடகொரிய தூதரகம் உள்ளது. இங்கு உள்ள தூதரகத்தில் சன் யங் நாம் என்பவர் தூதரக முதன்மை செயலாளராக பணியாற்றுகிறார். இவர் தங்கம் கடத்துவதாக வங்கதேச சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது.டாக்கா விமானநிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து சன் யங் நாம் விமானத்தில் வந்திறங்கினார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.10 கோடி மதிப்பிலான 27 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் தூதரகங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு தங்கம் கடத்தி வந்தார். வியன்னா மாநாட்டு ஒப்பந்தப்படி அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் கொண்டு வந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று வங்கதேச சுங்க இலாகாவின் உளவு பிரிவு தலைவர் மொய்னுல் கான் கூறினார்.வடகொரிய தூதரக அதிகாரி தங்கம் கடத்தி வந்தது குறித்து அவர்களது தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்மீது வங்கதேச தங்க கடத்தல் தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று வங்கதேச சுங்க இலாகா கூறுகிறது.அரபு நாடுகளில் இருந்து இந்தியா வழியாக வங்காளதேசத்துக்கு ஏராளமான தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளது.கடந்த 22 மாதங்களில் இந்திய எல்லையோர சாலை வழியாக வங்கதேசத்துக்கு சட்டவிரோதமாக சுமார் ஒரு டன் தங்கம் கடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.