பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. ஒன்றியத்தை சேர்ந்த 26 நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜூலியட் முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சந்திரன் வரவேற்றார்.சோலார் படகு, நீராவி மூலம் இயங்கும் லிப்ட், மரங்களின் மகத்துவங்கள், காடு வளர்ப்பு, இயற்கை உணவுகள், மழைநீர் சேகரிப்பு உள்பட 50க்கு மேற்பட்ட மாணவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் சிறந்த படைப்புக்கு இளம் விஞ்ஞானிகள் கணேஷ்வர், வினோத்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.