சென்னை: தனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேடை பாடகி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.வடபழனியை சேர்ந்தவர் பாத்திமா (34). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், கூறியிருந்ததாவது:மேடைப் பாடகியாக உள்ளேன். பியூட்டிஷியன் தொழிலும் செய்து வருகிறேன். எனக்கும் பரத்குமார் என்பவருக்கும் 2000ல் திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், 2010ல் கணவர் இறந்து விட்டார். இதைதொடர்ந்து என் தாய் வீட்டில் நான் தங்கினேன். அப்போது, வீட்டருகே விருதுநகரை சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்தார். அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். திருமணமாகாத குமார் எனது குழந்தையிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
திடீரென ஒருநாள் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். குமாரை விட நான் 6 வயது பெரியவள் என்பதால் அவரிடம் இருந்து நான் விலகி சென்றேன். நான் வேறு இடத்தில் குடியேறினாலும் அங்கு வந்தும் காதல் தொல்லை கொடுத்தார். நான் இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே, வேறு வழியில்லாமல் நானும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். தொடர்ந்து, 2013 ஜூன் 17ம் தேதி வட சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். எனது மகளை அவர் சட்டப்படி தத்தெடுத்துக் கொண்டார்.பின்னர், இருவரும் வடபழனியில் கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவருக்கு பல்வேறு தவணைகளில் ரூ.20 லட்சம் கொடுத்தேன். திடீரென அவர் வேலைப் பளு அதிகமாக இருப்பதாக கூறி தான் செய்து வந்த பணியை ராஜினாமா செய்தார்.
பின்னர், நியூசிலாந்து சென்றார். நானும் அங்கு சென்றேன். அங்கு அவர் என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். மகள் மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர், என்னை அங்கேயே விட்டு விட்டு தமிழகம் திரும்பிவிட்டார். தற்போது, எனக்கு தெரியாமல் அவரது உறவினர் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தகவல் தெரிந்து நாடு திரும்பினேன். குமார் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனவே, என்னை மோசடி செய்த கணவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணம் ரூ.20 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.