பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அரிவாளால் வெட்டிய இளம்பெண்
நாகர்கோவில்: நாகர்கோவில், தென் தாமரைக்குளம் அருகே உள்ள சுக்குபாறை தேரிவிளை பகுதியில் பழக்கடை நடத்தி வரும் இளம்பெண் ஒருவர் நேற்று மதியம் தனது கடையில் இருந்தார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், பழம் வாங்குவது போல் கடை முன் வந்தார். அவர் வந்த சமயத்தில் அந்த இளம்பெண் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் இளம்பெண்ணின் கையை பிடித்து கடைக்குள் இழுத்து, ஷட்டரை மூடினார். பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபரிடம் இருந்து தப்ப இளம்பெண் போராடினார். அந்த சமயத்தில் தனது கையில் கிடைத்த அரிவாளால் வாலிபரின் தலையில் வெட்டினார்.
இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஷட்டரை திறக்க, அந்த வாலிபர் ரத்த காயத்துடன் தப்பினார். அவரது பைக் மற்றும் செருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தென்தாமரைக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.இதற்கிடையே ரத்த காயங்களுடன் தப்பிய வாலிபரின் சட்டை கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் விசாரித்த போது வாலிபர் ஒருவர் தலையில் காயத்துடன் வந்து தண்ணீர் கேட்டதாக கூறினர்.
எனவே கடற்கரை கிராமத்தில் அந்த வாலிபர் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வாலிபர் பற்றிய விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வாலிபர் ஏற்கனவே காதல் திருமணம் செய்தவர். அவரது மனைவியை காதலிக்கும் போது, இதே போல் வீடு புகுந்து உள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் பிடித்து திருமணம் செய்து வைத்த தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது.