கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பின்பு, எல்லை மீறினால் மட்டும் அல்ல; எல்லை மீறாவிட்டாலும் தமிழக மீனவர்களுக்குத் தொல்லைதான். மீனவர்களின் வாழ்வாதாரமான கடல், எல்லை வகுத்துக்கொண்டதில்லை. ஆனால், நாடுகள் தான் பங்கு பிரிக்கின்றன. ஆர்ப்பரித்து எழும் அலைகளைப் போல், மீனவர்களின் கைது நடவடிக்கைகள், தமிழகக் கடலோரக் கிராமங்களை ஆவேசம் கொள்ள வைக்கின்றன. ஆனால், அமைதியான நடுக்கடலைப் போல்தான், அத்தனை ஆழத்தையும் உள்வாங்கி சோகத்தைக் கூட வெளிப்படுத்த வழியில்லாமல் மீனவர் குடும்பங்கள் மனதுக்குள் குமுறுகின்றன.தமிழர் வாக்குகளால் அரியணை ஏறிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, முதல் நடவடிக்கையாக, இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்களை விடுவித்தார். 81 படகுகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. படகுகளை மீட்க 140 பேர் கொண்ட தமிழக மீனவர் குழு விரைவில் இலங்கை செல்கிறது. உரிய பராமரிப்பு இல்லாததால், விலைமதிப்பு வாய்ந்த பல படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
படகு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திடீரென நாகை, காரைக்காலைச் சேர்ந்த 86 மீனவர்களை, இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டியதோடு தகராறும் செய்ததாக, மீனவர்கள் மீது பழிபோட்ட காலம், பழங்கதையல்ல. தற்போதும் தொடர்வதுதான் ஆதங்கம்.இந்தியா வந்திருந்த சிறிசேன, பிரதமர் மோடியுடன் கைகுலுக்கினார். அது இந்தியா, இலங்கை உறவுப்பாலம் விரிவதற்கான அடையாளம். இருநாட்டு மீனவர்களும் சகோதரர்கள். சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டிய தருணத்தில், ஆட்சியாளர்களின் எண்ணங்களைத் தகர்க்கும் விதத்தில், வன்ம விதைகள் எங்கிருந்தோ தூவப்படுகின்றன. இதைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் சொல்லலாம்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வரும் 6ம் தேதி இலங்கை செல்கிறார். சிறிசேன, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திக்கிறார். பிரதமர் மோடி இலங்கைக்கு 13ம் தேதி செல்ல உள்ள நிலையில், சுஷ்மாவின் பயணம், இதற்கான முகத்துவாரம். இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம், வீடுகள் கட்டித்தரும் திட்டம், அணுசக்தி, மின் திட்டங்கள் என சிறிசேனவுடன் மோடி பேச வேண்டிய விஷயங்கள் அதிகம். ஆனால், மீனவர்கள் பிரச்னையும் பிரதானமானது.இருநாடுகளின் நல்லுறவுக்கு அடையாளமாக கைதிகளை விடுவிப்பது போன்ற நடவடிக்கையாக, தமிழக மீனவர்களின் விடுதலை மாறிவருவதை ஏற்க முடியாது. ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகும், தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர வேண்டிய பொறுப்பை மத்திய அரசு உணர மறுப்பது உளப்பூர்வமானதாக இருக்காது.