பெய்ரூட்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிறை பிடித்து வைத்திருந்த 17 கிறிஸ்தவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். மேலும் 200 கிறிஸ்தவர்கள் பணயக் கைதி களாக உள்ளனர் என்று சிரியா வின் மனித உரிமை மேற்பார்வை குழு தகவல் வெளியிட்டது.சிரியா எல்லையில் இருக்கும் ஹசாகா நகரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிறைப்பிடித்து பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்கும்படி எகிப்து பலமுறை எச்சரிக்கை விடுத்தது. எனினும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஏற்கவில்லை.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் கிறிஸ்தவர்களும் சன்னி பிரிவு முஸ்லிம்களும் இணைந்து போராடி வருகின்றனர். இப்போரில் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் களத்தில் இறங்கியது.
இதைத் தொடர்ந்து, சிரியாவின் பல்வேறு பகுதிகளில் அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து, தற்போது பல்வேறு பகுதிகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.இப்பகுதிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து பணயக் கைதிகளாக பிடித்து வரப்பட்டவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுக்கி வைத்துள்ளனர். அவர்களில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் லிபியாவை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.இந்நிலையில், எகிப்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 17 கிறிஸ்தவர்களை நேற்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஷரியத் நீதிமன்றம் விடுதலை செய்தது.தற்போது அவர்களிடம் மேலும் 200 கிறிஸ்தவர்கள் பணயக் கைதிகளாக உள்ளனர் என்று சிரியாவில் இயங்கும் இங்கிலாந்தின் மனித உரிமை மேற்பார்வை குழு நேற்றிரவு தகவல் வெளியிட்டது.