மரத்தில் பால் வடிதல் இயற்கை : அறிவியல் இயக்கம் விளக்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணவாளன் பேசியதாவது:புதுக்கோட்டை பெரியார் நகரில் ஒரு வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் வந்துகொண்டிருந்தது. மக்கள் அந்த மரத்தை நோக்கி திரண்டு வழிபட துவங்கினர். இது இயற்கையான நிகழ்வு என்பது தான் அறிவியல். வேம்பு, முருங்கை போன்ற மரங்களுக்கு பிசின்களை வெளியேற்றும் தண்டுகளும், இடைவெளிகளும் இருக்கும். இதில்தான் இந்த தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
இச்சமயத்தில் பூச்சிகளால் மரம் துளைக்கப்படும் போது அதிலிருந்து வெளிவரும் பால் போன்ற திரவத்தில் கிருமி நாசினி, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் நாசினி ஆகியவை இருப்பதால் அந்தப்பூச்சித் தாக்குதலில் இருந்து மரத்தை பாதுகாக்கிறது.வேப்பமரத்தில் இருக்கும் தண்டுப்பகுதி பூச்சிகள் மற்றும் பூஞ்சைக் காளான்களால் தாக்கப்படும் போது வேகமாக செயல்பட்டு பிசின் மற்றும் பால்போன்ற திரவங்களை வெளியேற்றி தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பது அறிவியல் உண்மை. இதுவரை பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது ஒரு இயற்கையான அறிவியல் நிகழ்வு மட்டுமே.இவ்வாறு மணவாளன் பேசினார்.