சென்னை: தி.நகரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மண்ணடியை சேர்ந்தவர் அனீஸ் (27). தொழில் அதிபரான இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரிடம் மணி, தவ்லத் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். அனீஸ் நேற்று காலை ரூ.19 லட்சத்தை கொடுத்து தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள ஐஎன்ஜி வைஸ்யா வங்கி கிளையில் பணத்தை செலுத்தும்படி கூறினார். அதன்படி, நேற்று மதியம் பணத்தை எடுத்துக் கொண்டு மணி, தவ்லத் இருவரும் காரில் தி.நகர் நோக்கி புறப்பட்டனர். வங்கி கிளை முன்பு காரை நிறுத்திவிட்டு காரின் டிக்கியில் இருந்த பணப் பையை வெளியே எடுத்தனர்.
அப்போது அங்கு கார் ஒன்றும் 2 பைக்கில் 4 பேரும் மின்னல் வேகத்தில் வந்தனர். கார், பைக்குகளிலிருந்து இறங்கியவர்கள், மணி, தவ்லத் முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதில் இருவரும் அலறினர். உடனே அவர்களை தாக்கிவிட்டு, பணப்பையை கும்பல் பறித்துக்கொண்டு ஓடியது. ஒரு கும்பல் காரில் பறந்தது. இதைப் பார்த்து அதிர்ந்த அப்பகுதியினர் பைக்கில் சென்றவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது, ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் தன்னிடம் இருந்த பணப்பையை கீழேபோட்டுவிட்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.கும்பல் வந்த கார் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், அண்ணா மேம்பாலம் செம்மொழி பூங்கா அருகே பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.5 பேரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் திருவல்லிக்கேணி மிசா சீனிவாசன் (34), அதே பகுதி சண்முகம் (34), ராயப்பேட்டை உசேன் (24), திருவல்லிக்கேணி தமீம் (24), சைதாப்பேட்டை நிர்மல் ராஜன் (34) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் சேர்ந்துதான் கொள்ளையடிக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது. அவர்களை கைது செய்தனர். கைதான மிசா சீனிவாசன் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மத்திய சென்னை பொறுப்பாளர்.போலீசார் கூறுகையில், ' கைது செய்யப்பட்ட உசேன் பணம் கொடுத்து அனுப்பிய தொழில் அதிபர் அனீசின் உறவினர். இவரிடம் அதிக பணம் புழங்கியதை கேள்விப்பட்டு பணத்தை கொள்ளையடிக்க உசேன் முடிவு செய்துள்ளார். அதன்படி மணி, தவ்லத்தை நோட்டமிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்' என்றனர்.