சென்னை: தேர்தல் பணிக்காக ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முக்கிய முடிவுகள் எடுக்க, அவரது தலைமையில் அமைச்சரவை கூடுவது வழக்கம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று 4 மாதங்கள் முடிவடைந்தாலும் இதுவரை ஒருமுறை கூட அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 29 அமைச்சர்களும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் பிரசார பணிக்காக முகாமிட்டுள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க இன்று இரவு அனைத்து அமைச்சர்களும் சென்னை புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அனைத்து அமைச்சர்களும் மீண்டும் நாளை மாலை அங்கிருந்து ஸ்ரீரங்கம் திரும்புவார்கள் என தெரிகிறது.
முன்னதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போதுதான் தமிழக அமைச்சரவை கூட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், 2015ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தை எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்தும், அன்றைய தினம் தமிழக ஆளுநர் உரையில் இடம் பெறும் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.அதன்படி, வரும் 23ம் தேதி ஆளுநர் உரையுடன் 2015ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கலாம் என்றும், அதைத்தொடர்ந்து 3 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதற்காக சட்டப்பேரவை கூட்டம் நடத்தலாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.