கொழும்பு: ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தலைமை நீதிபதி ஓரிரு நாளில் பதவி விலகுகிறார் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதியாக பணியாற்றியவர் சரத் பொன்சேகா. ராஜபக்சே ஆட்சியின்போது விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களுக்கு பொன்சேகாதான் தலைமை தாங்கினார். போரில் வெற்றிப்பெற்றபின் ராஜபக்சேவுக்கு எதிராக செயல்பட்டார். இதையடுத்து ராணுவ பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, 2010ம் ஆண்டு இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில், ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அதன் பிறகு ராஜபக்சே அரசினால் பொன்சேகா பழிவாங்கப்பட்டார். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவரது குடியுரிமை உள்பட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. தற்போது நடந்த அதிபர் தேர்தலில் சிறிசேனவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து இருந்தார். ராஜபக்சே படுதோல்வி அடைந்ததை அடுத்து சிறிசேன தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது.ராஜபக்சே அரசால் பழிவாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுவதாகவும், அவரை விடுதலை செய்யுமாறு, அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுகிறது.
இதற்கிடையே பதவி இழந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அந்த நாட்டின் தலைமை நீதிபதி மொகான் பீரிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் சட்டவிரோதமான முறையில் பதவி வகித்து வருவதாகவும் அந்த நாட்டின் சட்ட வல்லுனர்கள் சங்கத்தினர் மற்றும் மூத்த வக்கீல்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகுமாறு, மொகான் பீரிசுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். இதை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக மொகான் பீரிஸ் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து ஓரிரு நாளில் அவர் பதவி விலகுவார் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்புவில் நேற்று தெரிவித்தார்.