அமெரிக்காவில் பறவை காய்ச்சல் : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி
சியாட்டில்: அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் அதிகளவில் பரவி வருகிறது. இம்மாநிலத்தில் கிளால்லம் கவுன்டி பகுதியில் 120 கோழி மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் பறவைகளை வளர்ப்போரிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கனடா நாட்டு எல்லை அருகே பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் மூலம் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. கிளால்லம் கவுன்டி பகுதியில் வளர்க்கப்படும் 120க்கும் மேற்பட்ட கோழி மற்றும் வாத்துகளிடம் பறவை காய்ச்சல் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றால் காட்டு பறவைகளுக்கும் நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோழி மற்றும் வாத்துகளை வளர்ப்போர், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோயால் பாதித்த பறவைகளையும் முட்டைகளையும் விற்பனைக்கு அனுப்பாமல், அவற்றை மண்ணுக்குள் புதைத்து அழித்துவிட வேண்டும். நோயால் பாதித்த பறவைகள் மூலம் மற்ற பறவைகளுக்கும் நோய் பரவாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க விவசாய துறை செய்தி தொடர்பாளர் ஜோலி ஹைடன் நேற்றிரவு சியாட்டில் நகரில் கூறினார். அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் அபாயம் ஏற்பட்டிருப்பது அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.