இலங்கை மாகாண முதல்வர்களுடன் அதிபர் சிறிசேன நாளை சந்திப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கொழும்புவில் நாளை மாகாண சபைகளின் முதல்வர்களை சந்திக்கிறார்.இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில்,“இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 3வது சட்ட திருத்தத்தை நாங்கள் முழுமையான கட்டமைப்புடன் நிறைவேற்றுவோம். ஜனநாயக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது என்பது புதிய அரசின் 100 நாட்கள் திட்டத்தின் முக்கிய அம்சம். அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் கோரிக்கைகள், யோசனைகள், விமர்சனங்களை புதிய அரசு வரவேற்கிறது. ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது இலங்கை நாடாளுமன்றம் கோமா நிலையில் இருந்தது.
எனவே அதனை பலப்படுத்தும் நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும். சுதந்திரமாக இயங்கும் ஆணையங்கள் 19வது சட்ட திருத்தத்தின் மூலமாக அமைக்கப்படும், என்றார். இந்நிலையில் மாகாண முதல்வர்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேன அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதில், மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள், ஆட்சி அதிகாரப் பகிர்வு உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்க நாளை கொழும்பு வருமாறு கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கை அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக மாகாண முதல்வர்களை அவர் நாளை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.