கேமரூனில் 80 பேரை கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள் ராணுவ நடவடிக்கையில் 24 பேர் மீட்பு
யாண்டே: நைஜீரியாவை சேர்ந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்துக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 80 பேரை கடத்தி சென்றனர். இதில் 24 பேரை ராணுவம் மீட்டுள்ளது. நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. நாட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, பொதுமக்களை கடத்தில் செல்லும் செயலிலும் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்தி சென்றனர்.
நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி வந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அண்டை நாடான கேமரூனிலும் தங்களுடைய கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர். அந்நாட்டுக்கு உட்பட்ட 2 கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 80 பேரை நேற்று முன்தினம் கடத்தி சென்று பிணை கைதிகளாக வைத்திருந்தனர்.இந்நிலையில், கடத்தி சென்றவர்களை மீட்க கேமரூன் நாட்டு ராணுவம் நேற்று தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இருதரப்பினர் இடையே தீவிர சண்டை நடந்தது. இதையடுத்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 24 பேரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.பொதுமக்களை கடத்தி பிணைக்கைதிகளாக்கும் செயல் மனித உரிமை மீறலாகும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு நாடுகளுடன் நாளை ஆலோசனை நடத்தும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளது.