இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்திவிட்டார் : வைகோ பேட்டி
தஞ்சை: இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தி விட்டார். ராஜபக்சே தோல்வி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் சிறிசேனா வெற்றியால் இலங்கையில் பெரிய அளவில் மாற்றம் வந்துவிடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.தஞ்சையில் இன்று அவர் அளித்த பேட்டி: காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்தும், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தஞ்சையில் வரும் 20ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள திமுக, அதிமுக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதிக்குள் கலந்து கொள்ள உள்ள கட்சிகளின் விவரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்வில் இது சந்தோஷமான நாள். ஆனால் சிறிசேனா வெற்றியால் அங்கு பெரிய அளவில் மாற்றம் வந்துவிடாது. அதேசமயம் அங்கு தமிழர்கள் படுகொலை இனி நடக்காது என நம்புகிறேன். தேர்தலில் வெற்றி பெற திருப்பதி கோயிலுக்கு வந்து ராஜபக்சே தரிசனம் செய்துவிட்டு சென்றார். இதை எதிர்த்து போராட சென்ற கட்சியினரையும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களைவும் போலீசார் அடித்து துரத்தினர். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்திவிட்டார்.