சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 11வது முறையாக திமுக தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கருணாநிதி ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:திமுகவை வழிநடத்தி செல்லும் பக்குவத்தை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். நான் 7 மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கூறி இருக்கிறேன். அந்த உழைப்பின் மேன்மையை இன்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். மேன்மை, வன்மை, மென்மை ஒன்று சேர்த்து இயக்கத்தை வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இந்த கூட்டத்துக்கு வர முடியுமா என்ற கேள்விக்குறியில் என் உடல்நிலை சீர்குலைந்து இருந்தது. எப்படியும் வர வேண்டும் என்ற உணர்வோடு வந்தேன்.
இந்த கூட்டத்தில், தேர்தலை நடத்திய சற்குணபாண்டியன் சிறுமியாக இருந்த காலம் தொட்டு இயக்கத்துக்காக உழைத்து வருகிறார். இன்று சற்குண பாண்டியனுக்கு கிடைத்த பெருமை இந்த இயக்கத்துக்காக உழைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும். இந்த இயக்கம் யாரையும் கைவிட்டுவிடாது. எல்லோருக்கும் துணை நிற்கும். எல்லோருக்கும் வாழ்வளிக்கும். என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் என்று கூறுவது அலங்கார வார்த்தையல்ல. நாம் ஒரே குடும்பம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதற்காகத்தான்.திமுக தேர்தலில் தோற்றுவிட்டதால் இனி அவ்வளவுதான் என்று சில கட்சிகள் ஆலமரத்தடி ஜோசியம்போல நமக்கும் ஜாதகம் பார்க்கிறார்கள். நாம் அந்த ஜாதகத்தை நம்பி இயக்கம் நடத்தவில்லை. நம்மை நம்பி நடத்துகிறோம்.
இயக்கத்துக்காக உயிரையும் தருவோம் என்று உறுதியுடன் இருக்கிறோம். இயக்கத்தை அழித்துவிடலாம் என்று யார், யாரோ முயற்சித்தார்கள். அந்த முயற்சிகள் பலிக்கவில்லை. பலிக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட இயக்கத்தை எங்கிருந்தோ புதிதாக வந்தவர்கள் அழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள். பாஜ.வினர் நம்மை சாதாரணமாக கருதி, திட்டம் போட்டு கையாண்ட முயற்சிகள், வழிமுறைகளில் வெற்றிக் கண்டது இல்லை. எத்தனையோ கட்சிகள், பகைவர்கள், நம்மை அழித்துவிடலாம் என்று திட்டம் போட்டு காய் நகர்த்தினார்கள். அந்த காயை வீழ்த்தி நாம் வெற்றிப் பெற்றோம். தோல்வி காணவில்லை. தோல்வி காணபோவதும் இல்லை. திமுகவை அழித்துவிடலாம் என்று நகர்த்திய காய்கள் சரிப்பட்டு வராததால் வசீகரிக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.
ஜெயலலிதாவை விட ஏமாற்றும் தன்மை பெற்றவர்கள் நம்மை நோட்டம் பார்க்கிறார்கள். அவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. எந்த காலத்திலும் திமுக பிறருக்கு அடிபணிந்தது இல்லை. லட்சியத்தை விட்டுவந்தது இல்லை. கொள்கை லட்சியத்தை யாருக்கும் விட்டு தரமாட்டோம். அப்படியொரு நிலை வந்தால் நாங்களும் சேர்ந்து அழிவோம். கொள்கைகள் அழிய சம்மதிக்க மாட்டோம். யாருக்கோ வெண்சாமரம் வீசி கொள்கையை கைவிட்டு நம்மை வளர்த்துக் கொள்ள நாம் தயாராக இல்லை. இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். அந்த எழுச்சியை பயன்படுத்தி இந்த இயக்கத்தை மென்மேலும் வளர்ப்போம். தமிழ், தமிழர் தன்மானம் காப்போம்.