திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இலவச தரிசனம், திவ்ய தரிசனம், விஐபி தரிசனம், ரூ.300க்கான சிறப்பு தரிசனம் ஆகியவற்றில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை படிக்காத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் கிராமபுறத்தில் உள்ள பக்தர்களும் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெறும் வகையில் தபால் நிலையங்களில் ரூ. 300க்கான டிக்கெட் விற்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் மட்டும் ரூ.300க்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டது. மேலும் இந்த 2 மாநிலங்களில் மட்டும் கிராமபுறங்களில் உள்ள தபால் நிலையங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களும், தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் விதமாக 87 இடங்களில் தேவஸ்தான தகவல் மையங்கள், கல்யாண மண்டபங்களில் இ-தர்ஷன் கவுன்டர்கள் செயல்பட்டு வந்தது.ஒங்கிணைந்த ஆந்திராவில் 56 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களில் முக்கிய நகரங்களான ஷீரடி, உடுப்பி, வாரணாசி, மும்பை, நாக்பூர், கோவை, கன்னியாகுமாரி, மதுரை, அமராவதி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் 31 தேவஸ்தான தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு, இ-தர்ஷன் கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அனைத்து தரிசன டிக்கெட்டுகள், தங்கும் அறை ஒதுக்கீடு போன்றவற்றை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறையை தேவஸ்தானம் நிர்வாகம் எடுத்து வருகிறது. இதனால் வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் செயல்பட்டுவரும் இ-தர்சன டிக்கெட் கவுன்டர்கள் மூடுவதற்கான நடவடிக்கைகளை தேவஸ்தான அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் கிராமப்புற பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானவில் உள்ள அஞ்சலகங்களில் மட்டுமே தரிசன டிக்கெட், அறைகள் முன்பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு ழுழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் உள்ள இ-தர்ஷன் டிக்கெட் கவுன்டர்களை மூடுவதால் மற்ற மாநிலங்களில் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்ய சிரமப்படுவார்கள். எனவே நாடும் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தரிசன டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுத்த பிறகே, இ-தர்ஷன் டிக்கெட் கவுன்டர்களை மூட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.