சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:பாஜ எம்பி சச்சிதானந்த அரி என்ற சாக்சி மகாராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடுகிற வகையிலும், வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலும் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் துறவிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில் ‘நான்கு மனைவிகளை கட்டிக் கொண்டு நாற்பது குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் கலாசாரம் இந்தியாவில் சரிபட்டு வராது, ஆகவே, இந்து பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளையாவது, இந்து மதத்தைக் காப்பாற்ற பெற்றுக் கொள்ள வேண்டும்.
பசு வதை தடை சட்டம், மதமாற்றத் தடை சட்டம் ஆகிய சட்டங்களை விரைவில் மைய அரசு நிறைவேற்ற உள்ளது. அதன்பிறகு எவராவது பசு வதையில் ஈடுபட்டலோ, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். உலகில் எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது’ என்று பேசியதாகப் பத்திரிகை செய்திகளின் மூலம் தெரிய வருகிறது. அவருடைய பேச்சு வகுப்புவாத உணர்வைத் தூண்டிவிடுவதாக உள்ளது. அவர் கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சென்றுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக ராஜ்யசபை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தெரிய வருகிறது. அவரின் இந்த பேச்சு ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டமிட்ட செயல்பாடுகளின் வெளிப்பாடாகத்தான் கருத முடிகிறது. சாக்சி மகாராஜ் போன்றவர்களை பிரதமர் மோடி வெளிப்படையாகக் கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.