திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சகல விஷ்ணு ஆலயங்களிலும் நாளை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 21ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவம் 22ம் தேதி தொடங்கியது. நம்பெருமாள் தினம் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் பத்து நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று (31ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.விழா முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (1ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. அதிகாலை 3.45 மணிக்கு (விருச்சிக லக்னத்தில்) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து புறப்படுகிறார்.
ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் செல்கிறார். அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்க¬வாசல் திறப்பையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தில் இன்றும், நாளையும் கட்டணமில்லா 3 வட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இன்றும், நாளையும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.திருப்பதி, சென்னை பார்த்தசாரதி கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.