ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் (மதரஸா) பூரி, சிக்கன் சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் மைமுணா (ரலி) நிஸ்வான் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கான அரபி மொழி மற்றும் குர்ஆன் கற்பிக்கும் மதரஸா உள்ளது. இங்கு சென்னை, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட 10ம் வகுப்பு முடித்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவாக பூரி, சிக்கன் வழங்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் இதை சாப்பிட்டனர். அன்று முதல் 14 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை மோசமானது. இதையடுத்து நேற்றிரவு, 14 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இந்த பாடசாலைக்கு செல்லும் குடிநீர் பைப்பும், கழிவுநீர் பைப்பும் ஒன்றாக உள்ளது. அதனால் தண்ணீர் மூலம் இந்த பாதிப்பு நிகழ்ந்திருக்கலாம் அல்லது உணவு மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.