ஐதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு விஜயவாடா அருகே புதிய தலைநகரம் அமைப்பது தொடர்பான தலைநகர் பிராந்திய வளர்ச்சி ஆணைய மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த ஆணையத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைவராக இருப்பார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா என்ற புதிய மாநிலம் கடந்த ஜூன் 2 ம் தேதி உதயமானது. தெலங்கானாவுக்கும், புதிய ஆந்திராவுக்கும் ஐதராபாத் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மட்டும் பொது தலைநகராக இருக்கும். இந்த காலகட்டத்துக்குள் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை அமைக்க வேண்டும். 10 ஆண்டுக்கு பின்னர் ஐதராபாத் தெலங்கானாவின் தலைநகராக மட்டும் செயல்படும்.
ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகர் அமைக்க குண்டூர், விசாகப்பட்டினம், விஜயவாடா என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் விஜயவாடா அருகே புதிய தலைநகர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தலைநகரை உருவாக்குவதற்கான வளர்ச்சி ஆணையம் அமைக்க வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்ற ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த அமைப்பின் தலைவராக முதல்வர் சந்திரபாபு நாயுடு இருப்பார். இந்த மசோதா நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.