பெரு கடற்பகுதியில் 500 கடல் சிங்கங்கள் செத்து மிதப்பு : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி
லிமா: பெரு கடற்பகுதியில் நேற்று காலை 500க்கும் மேற்பட்ட கடற்சிங்கங்கள் செத்து மிதந்தன. இந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள பெரு நாடு, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாகும். பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் சான்டா பிராந்தியம் உள்ளது.இங்குள்ள நீண்ட கடற்கரையில் நேற்று விடுமுறை தினமாதலால் ஏராளமான மக்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை ஓரமாக 500க்கும் மேற்பட்ட வயதான மற்றும் குட்டி கடற்சிங்கங்கள் செத்து மிதந்தன.
அவற்றில் பெரும்பாலான கடற்சிங்கங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, அந்த கடற்சிங்கங்களை பரிசோதித்தனர். அப்பகுதியில் விவசாயிகளும், மீனவர்களும் கடலுக்குள் ஏராளமான கடற்பாசிகளை வளர்த்து வருகின்றனர். அவர்கள் கடலில் விதைத்து வைத்திருக்கும் கடற்பாசிகளை கடற்சிங்கங்கள் சாப்பிடுவதால் இறந்திருக்கலாம் அல்லது விஷம் வைத்து கொல்லப் பட்டிருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.